ஸ்மார்ட் திட்டம்: மின்விளக்குகளால் இரவில் ஒளிரும் தஞ்சாவூர் பாலம்

மேம்பாலத்தில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு பாலத்தின் கீழ்பகுதியில் டைனமிக் எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

Update: 2021-09-03 04:15 GMT

எல்இடி மின்விளக்குகளால் இரவில் ஒளிரும் தஞ்சாவூர் பாலத்தின் அடிப்பாகம்

சென்னைக்கு அடுத்தபடியாக தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாலத்தில் ரூ.3 கோடி செலவில்  கண்ணைக் கவரும் வகையில் டைனமிக் எல்இடி மின் விளக்குகளால் ஒளிரும் மேம்பாலம் அனையவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

தஞ்சாவூர் மாநகரில் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசின் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் ரூ.1,289 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியின் கீழ், பாரம்பரியமான தஞ்சாவூர் நகரை மேலும் அழகு படுத்தும் வகையில், கோட்டை அகழி மேம்பாடு, குளங்கள் மறுசீரமைப்பு, குடிநீர் அபிவிருத்தி, புதை சாக்கடை சீரமைப்பு பணிகள், காய்கறி சந்தைகள் சீரமைப்பு, மணிகூண்டு சீரமைப்பு, பழைய பேருந்து நிலையம் புதுப்பித்தல், பூங்காக்கள் சீரமைப்பு, நகரங்களின் சாலைகள் புதுப்பித்தல், நகர்புறங்களில் தெருக்கள் மேம்பாடு என 90 திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதில் 16 திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் ஒருபகுதியாக, தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் - சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தில் இரவு நேரங்களில், ஒளிரும் டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், பாலம் இரவு நேரத்தில் மின்னொளியில் அழகுடன் மிளிரத் தொடங்கியுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக மின்விளக்கு எரியத் தொடங்கியுள்ளது. இந்த மின் விளக்குகள் எரிவதை பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.

இதுகுறித்து, தஞ்சாவூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது: தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகரை அழகுபடுத்தும் பணிகளில், ஒன்றாக தஞ்சாவூர் மேரீஸ்கார்னர் - சாந்தபிள்ளைகேட் மேம்பாலத்தில் சுமார் 100 மீட்டர் நீளத்துக்கு பாலத்தின் கீழ்பகுதியில், ரூ.1 கோடி மதிப்பில் டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது சோதனை முயற்சியாக, மின் விளக்குகள் எரிய வைக்கப்பட்டுள்ளது.  விரைவில் முழுமையாக  பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனால் பாலத்தின் கீழ் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டுவது  தடை செய்யப்படும். சென்னையில் நேப்பியர் பாலம் உள்ளிட்ட 16 இடங்களில்,  இதுபோன்று, டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரிலும் அமைக்கப்பட்டு வருகிறது.  தஞ்சையில் மேலும்  மூன்று இடங்களில் ரூ.2 கோடி செலவில் டைனமிக் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளது என்றனர்.

Tags:    

Similar News