தஞ்சை அருகே துலுக்கம்பட்டியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 6 பேர் கைது
தஞ்சை அருகே துலுக்கம்பட்டியில் ஆயுதங்களுடன் நின்றிருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை அருகே துலுக்கம்பட்டி பிரிவு சாலை பகுதியில் 6 பேர் ஆயுதங்களுடன் நின்றிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீஸ் இன்ஸ்பெக்டர்( பொறுப்பு) கார்த்திகேயன் மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு 2 அரிவாள், கத்தி மற்றும் உருட்டுக்கட்டையுடன் நின்றிருந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர்.
பின்னர் அவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் தஞ்சை நாஞ்சிக்கோட்டை இ.பி. காலனி ஆறுமுகம் என்பவரின் மகன் மணிகண்டன் (25), செபாஸ்டியன் மகன் பிரின்ஸ்லாரா (27), ஜீவா (23) சென்னை பாண்டியன் நகரை சேர்ந்த கேசவன் மகன் வெங்கட் (27), மாதாக்கோட்டை கலியன் மகன் அஜித் செல்வம் (21), கும்பகோணம் பாஸ்கரன் மகன் ராஜேஸ்கண்ணன் (21) என்பது தெரிய வந்தது. இதில் சிலர் மீது பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரையும் கைது செய்தனர்.