பனங்குளம் கிராமத்தில் தனியார் அறக்கட்டளை சார்பில் விதைப்பந்து விழா
நூறு நாள் வேலை பணியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஊர்ப் பொதுமக்கள் குளக்கரை பொது இடங்களில் விதைப்பந்து விதைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், கொளக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பனங்குளம் கிராமத்தில், அல்லிக்குளக்கரையில் அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை சார்பில் ஆயிரம் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளைத் தலைவர் முனைவர் ஜீவானந்தம் தலைமை வகித்தார். கொளக்குடி ஊராட்சி செயலர் பாலசந்தர், சமூக ஆர்வலர் கே.வி.முத்தையா, பனங்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொளக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் காசியம்மாள் மணி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை உறுப்பினர் அமரா அழகு நன்றி கூறினார்.
நூறு நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், ஊர்ப் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு, குளக்கரை மற்றும் பொது இடங்களில் விதைப்பந்து விதைத்தனர். மேலும், கொளக்குடி ஊராட்சியைப் பசுமை ஊராட்சியாக மாற்றுவோம் என உறுதியேற்றனர்.