கல்லணை கால்வாயில் முழுவீச்சில் நடைபெறும் புனரமைக்கும் பணிகள்

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் ஓடும் கல்லணைக் கால்வாயில், புனரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

Update: 2022-04-26 00:00 GMT

ஆலக்குடி பகுதியில் நடைபெறும் கல்லணைக் கால்வாயில் புனரமைப்பு பணிகள்.

கல்லணையில் தொடங்கி தஞ்சை, பூதலூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய பகுதிகள் பாசனம் பெற உதவுவது கல்லணை கால்வாய் ஆகும். இதை,  புதுஆறு என்றும் அழைப்பர். கடைமடை வரை தண்ணீர் சென்று அடைய வசதியாக கல்லணை கால்வாய் பயன்படுகிறது.

இந்த கல்லணைக் கால்வாயை சீரமைத்து நவீனப்படுத்துதல் பணிகள் கடந்தாண்டில் தொடங்கப்பட்டது. அப்போது மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படாததால் பணிகள் வேகமாக நடந்து வந்தது. கல்லணை கால்வாயின் இரு கரைகளையும் சீரமைத்து கான்கிரீட் சாய் தளம் அமைப்பதற்கு வசதியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் தரை தளங்கள் அமைக்கும் பணியும் நடந்து வந்தது.

இந்நிலையில் காவிரி டெல்டா பாசனத்திற்காக கடந்தாண்டு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து கல்லணைக்கால்வாயில் புனரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து சம்பா, தாளடி பணிகள் முடிந்து தற்போது ஆற்றில் தண்ணீர் வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் கல்லணைக் கால்வாயில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில்,  தஞ்சை அருகே ஆலக்குடி – வல்லம் சாலையில் ஓடும் கல்லணைக்கால்வாயில் சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இருபுறமும் கரைகள் பலப்படுத்தி தரைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் தடையின்றி வேகமாக செல்லும் மேலும் கரைகளும் வலுவானதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News