டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளில் ஈடுபடும் வட மாநிலத்தவர்கள்

டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளில் வட மாநிலத்தவர்கள் ஈடுபடுத்தப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது

Update: 2021-12-06 17:15 GMT

டெல்டா மாவட்டங்களில் உள்ள தொழிலாளர்கள், ஊரக வேலை திட்டப் பணிகளில் ஈடுபடுவதால், விவசாயப் பணிகளுக்கு போதிய ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால், விவசாய பணிகளையும், ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்திற்கு வந்து கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள், விவசாயப் பணிகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து அப்பணிகளிலும் கால் பதித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலுார் போன்ற பகுதிகளில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட ஆண் தொழிலாளர்கள் குழுவாக தங்கி, நெல் நடவுப் பணிகளை செய்து வருகின்றனர்.

உள்ளூரில், பெண்கள் நடவுப் பணிகளை மட்டுமே மேற்கொண்டதால், அவர்களுக்கு நாற்று பறித்து கொடுத்தல், உரமிடும் பணிகளை தனியாக ஆண் தொழிலாளர்களை கொண்டு செய்யும் நிலை இருந்தது. இதனால், ஏக்கருக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. ஆனால், மேற்கு வங்க தொழிலாளர்கள், நாற்று பறித்து, உரமிட்டு, நடவுப் பணிகளை மேற் கொள்கின்றனர். இதில், ஒரு ஏக்கருக்கு 5,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. சில வாரங்களாக, தஞ்சாவூர் அருகே தென்னங்குடி, சீராளூர், கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் 15 பேர் அடங்கிய குழுவினர் நடவு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், ஒரு நாளில் 5 ஏக்கர் வரை கயிறு கட்டி மிக நேர்த்தியாக நடவுப் பணிகளை மேற்கொள்கின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக, விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். கர்நாடகா, கேரளா, தமிழகம் போன்ற மாநிலங்களில், சீசன் நேரத்தில் நடவுப் பணிகளை மேற்கொள்வோம். இப்போது, இங்கு நடவுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

Tags:    

Similar News