தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேசும் கலை, எழுதும் கலை பட்டயப் படிப்புகள் அறிமுகம்
பன்னாட்டு மாணவர்களை பேசும் கலையில் வல்லவர்களாக உருவாக்கும் வகையில் மலேசியாவில் பேசும் கலைப் படிப்பு தொடங்கப்பட உள்ளது.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பேசும் கலை, எழுதும் கலையில் பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக துணைவேந்தர் கோ.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் திருக் குறள் தொடர்பான வகுப்புகளை நடத்தி வரும் பழந்தமிழ்க்காவிரி அறக்கட்டளையும், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையமும் இதுதொடர்பாகநேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்நிகழ்வில் பங்கேற்று தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் கோ.பாலசுப்பிரமணியன் பேசியதாவது: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேசும் கலை மற்றும் எழுதும்கலையில் பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைய காலக்கட்டத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான நேர்காணல்களிலும், அலுவலக நடைமுறைகளிலும் குழு கலந்துரையாடல் என்ற உத்தி பயன்படுத்தப்படுகிறது. இந்த வகையான விவாதங்களில் பங்கேற்று கருத்துரைப்பதில், இளம் தலைமுறையினரிடையே தயக்கம் நிலவுகிறது. எனவே, பேசும் கலையை அறிமுகப்படுத்துவதன் மூலம், மேடை பேச்சுக்கலை மற்றும் அன்றாட வாழ்வியல் தேவைக்கான பேசும் கலை என இரு கோணங்களில் பயன்பெறும் வகையில் இப்படிப்பு அமைகிறது.
மேலும், இணையவழியில் சுருக்க வடிவிலான குறியீடுகளில் விடையளிக்கும் காலத்தில் வாழ்வதால், எழுதும் கலை என்ற மிகச் சிறந்த வெளிப்பாட்டை இழந்து வருகிறோம். எனவே, காலத்தின் தேவையைக் கருதி, எழுதும் கலை குறித்த பட்டயப்படிப்பு தொடங்கப்படுகிறது. மேலும், பன்னாட்டு மாணவர்களைப் பேசும் கலையில் வல்லவர்களாக உருவாக்க உத வும் வகையில், விரைவில் மலேசியாவில் பேசும் கலைப் படிப்பு தொடங்கப்பட உள்ளது என்றார்.
இந்நிகழ்ச்சியில் பல்கலைக் கழகப் பதிவாளர்(பொ) மோ.கோ. கோவைமணி, தமிழ் வளர் மைய இயக்குநர்(பொ) இரா. குறிஞ்சிவேந்தன். பழந்தமிழ்க் காவிரி அறக்கட்டளை நிறு வனத் தலைவர் மணவை தமிழ் மாணிக்கம், செயலாளர் ஆ.தமிழ் மணி, புரவலர் எம்.ஆர்.பாலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.