தஞ்சையில் உலக சுகாதார விழிப்புணர்வு பேரணி: மேயர் தொடங்கி வைத்தார்
தஞ்சையில் உலக சுகாதார விழிப்புணர்வு பேரணியை, மேயர் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை முன்னிட்டு தஞ்சாவூரில் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் உலக சுகாதார தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தஞ்சை மேரிஸ் கார்னர் பகுதியில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் செவிலிய மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கொண்டு சென்றும், மரம் வளர்ப்போம் இயற்கை வளங்களை பாதுகாப்போம் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியும் பேரணியாக சென்றனர். இப்பேரணியில் துணைமேயர் அஞ்சுகம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.