தஞ்சை சரஸ்வதி நூலகத்தை பார்வையிட்ட தமிழக ஆளுநர்
செல்லரித்து சேதமடைந்துள்ள ஓலைச்சுவடிகளை மின் உருவாக்கம் செய்யும் பணிகள் குறித்து ஆளுநர் கேட்டறிந்தார்
உலகப் புகழ்பெற்ற தஞ்சை சரஸ்வதி நூலகத்தை ஒரு மணி நேரத்திற்கு மேலாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பார்வையிட்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சனிக்கிழமை பிற்பகல் தஞ்சை வந்தடைந்தார். பின்னர் உலகப் புகழ் பெற்ற தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தை பார்வையிட்டார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள், பழமையான அரிய வகை புத்தகங்கள், 1888 ஆம் ஆண்டு வரையப்பட்ட இந்திய வரைபடம் மற்றும் ஓவியங்கள் போர்க்கருவிகள் என அனைத்தையும் பார்வையிட்டார். பின்னர், செல்லரித்து சேதமடைந்துள்ள ஓலைச்சுவடிகளை மின் உருவாக்கம் செய்யும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் குறித்து விளக்கும் ஒளிக்காட்சியினை சுமார் 27 நிமிடங்கள் கண்டு ரசித்தார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக தஞ்சை சரஸ்வதி நூலகத்தை அவர் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய புறப்பட்டார்.