மக்களை திமுக அரசு ஏமாற்றுக்கிறது: டிடிவி.தினகரன் குற்றச்சாட்டு
மக்களை ஏமாற்றுகின்ற வேளையில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக தஞ்சையில் டிடிவி.தினகரன் பேட்டி.
தஞ்சையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
தமிழகத்தில் சொத்துவரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை நாங்கள் கண்டிக்கிறோம். கடந்த ஆட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டபோது தற்போதைய முதலமைச்சர் அதனைக் கண்டித்து சொத்து வரியா? சொத்தை பறிக்கின்ற வரியா? என விமர்சித்து இருந்தார்.
தற்போது அவரது ஆட்சியிலே சொத்து வரி உயர்த்தப்பட்டு இருப்பது அவர் முன்னர் கூறிய வசனம் அவருக்கே பொருந்தி உள்ளது. கொரோனாவில் இருந்து தற்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வருகிறோம். இந்த சூழ்நிலையில் சொத்துவரி உயர்த்தி இருப்பது எந்த விதத்தில் நியாயம். அவருக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
பொது விநியோகத் திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என அறிவிப்பு குறித்து கேட்டதற்கு, பெருகவாழ்ந்தான் அருகே சித்தமல்லி பகுதியில் ரேஷன் கடையில் தரமில்லாத காலாவதியான பொருள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதைப் பயன்படுத்திய பொதுமக்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றுகின்ற வேளையில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது என்று கூறினார்