மது அருந்தியதை தட்டிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் : 2 பேர் கைது
மது அருந்தியதை தட்டிக்கேட்ட இளைஞனை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை பகுதியில் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மது அருந்திக் கொண்டு இருந்ததை தட்டிக் கேட்டவரை தாக்கி மிரட்டல் விடுத்த வார்டு மெம்பர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், மாத்தூர் மேற்கு மேலத் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் ஆனந்தன் (40). அதே பகுதியை சேர்ந்தவர் திரிசங்கு என்பவரின் மகன் ராஜேந்திரன். இவர் அந்த பகுதி வார்டு உறுப்பினர். இவர் அடிக்கடி பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் மது அருந்தி வந்துள்ளார். இதனை பார்த்த ஆனந்தன் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ராஜேந்திரன் மற்றும் தொட்டி மாத்தூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த தர்மராஜ் என்பவரின் மகன் ரவீந்தர் (45) ஆகிய இருவரும் சேர்ந்து ஆயுதம் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதில் காயமடைந்த ஆனந்தன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன் மற்றும் ரவீந்தரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.