தஞ்சை அருகே அரசு பஸ்சும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பஸ் டிரைவர் பலி
தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ்சும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பஸ் டிரைவர் பலியானார்
தஞ்சை அருகே வளம்பக்குடியில் தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தஞ்சை நோக்கி வந்த அரசு பஸ்சும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பஸ் டிரைவர் பலியானார்.
திருச்சியிலிருந்து தஞ்சை நோக்கி அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடி பகுதியில் டிரெய்லர் லாரி ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக அரசு பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் பேருந்துசாலையை விட்டு இறங்கியது. மேலும் பஸ்சிற்கு முன்னால் குடும்பத்துடன் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் மனையேறிப்பட்டி செல்வம் என்பவர் பைக் மீது பஸ் மோதியது. இதில் செல்வம் மற்றும் அவரது மனைவி, குழந்தை மூவரும் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் அரசு பஸ் டிரைவர் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் பகுதியை சிவக்குமார் (45) சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் பஸ் பயணிகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களில் மூன்று பேரின் நிலை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.