தஞ்சாவூரில் 15 வயது பள்ளி மாணவி கர்ப்பம்: போக்சோவில் இளைஞர் கைது
தஞ்சாவூரில் பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர், மனோஜிபட்டியை சேர்ந்தவர் 15 வயதான சிறுமி. ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். திருவண்ணாமலையை சேர்ந்தவர் சரவணன் மகன் விக்ரம் வயது 22. விக்ரம் சிறுமியின் உறவினர் முறை என்பதால், திருவண்ணாமலையில் இருந்து அடிக்கடி, தஞ்சாவூருக்கு வந்தபோது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
உறவினர்கள் என்பதால் சகஜமாக பேசி கொண்டு உள்ளனர். இதனை உறவினர்களும் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி 4 மாத கர்ப்பம் அடைந்தார்.
இவ்விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் விக்ரமை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.