பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவமனையில் ஆய்வு...
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் பழனிமாணிக்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்த ராவ் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்த டெல்டா மாவட்டங்களின் முன்னோடி மருத்துவமனையாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பழனிமாணிக்கம் ,மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் ,திருவையாறு சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நீலமேகம் உள்ளிட்டோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் ராசா மிராசுதார் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர் .
தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் தொடர்பாக மருத்துவ அலுவலர்கள் உடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பரிசோதனை செய்யப்பட்டு உள்ள நபர்களின் எண்ணிக்கை குறித்தும் எத்தனை நாட்களில் பரிசோதனை முடிவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் குறித்தும் அவற்றில் இணைப்புடன் கூடிய படுக்கை வசதிகள் எவ்வளவு ,
அதில் தற்போது எத்தனை நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் குறித்து கேட்டறிந்தனர். மேலும் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த கூடிய மருந்துகள் கையிருப்பு குறித்து இந்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கலந்தாய்வு தொடர்பாக தமிழக முதலமைச்சருக்கு விரிவாக விளக்கம் அளிக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் .
ஆய்வின் போது மாவட்ட கண்காணிப்பாளர் தேஸ்முக் சேகர் சஞ்சய், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.