ரூ. 3 லட்சம் மதிப்பில் போலீஸ் கண்காணிப்பு கூண்டுகள் அமைப்பு

கும்பகோணத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் 6 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Update: 2021-07-22 06:30 GMT

புதியதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கூண்டு.

கும்பகோணம் நால் ரோடு முதல் கும்பேஸ்வரன் கோவில் மேலவீதி வரை சுமார் 4 கிமீ நகரத்தின் முக்கிய சாலையாகும். இந்த பகுதியில் அதிகளவில் ஜவுளி நிறுவனங்கள், நகைக்கடைகள், பாத்திரக்கடை உள்ளிட்ட முக்கிய கடைகள் மற்றும் கோவில்கள் உள்ளன. இதனால், தினமும் நகை, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்க மக்கள் வந்து செல்கின்றனர்.

மேலும், தஞ்சை மார்க்கத்தில் இருந்து நகரத்திற்குள் வரும் அனைத்து பஸ் போக்குவரத்துக்கும் இந்த சாலைதான் பயன்படுத்தப்படுகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து பயன்பாட்டால் இந்த சாலை எப்பொழுதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலாக காணப்படும். 

போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் முக்கிய சாலை சந்திப்புகளில் பணியில் ஈடுபட் டுள்ளனர். குறிப்பாக நால்ரோடு, பழைய மீன்மார்க்கெட் சந்திப்பு, செல்வம் தியேட்டர்சந்திப்பு, ராமன் ராமன் சந்திப்பு, டைமண்ட் தியேட்டர் சந்திப்பு, உச்சிப்பிள்ளையார் கோவில் சந்திப்பு ஆகிய 6 இடங்களில்  ரூ.3 லட்சம் செலவில் பிரத்யேக கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது,  கூண்டிற்குள் இருந்து கண்காணிப்பு கேமரா மூலம் போக்குவரத்தை சரி செய்யும் பணியை புதியதாக நியமிக்கப்பட்ட போலீசார் தொடங்கியுள்ளனர். 

கும்பகோணத்தின் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பாலக்கரை, தாசில்தார் அலுவலகம், தலைமை தபால் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வதால், இந்த பகுதியும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக உள்ளதால், மேலும் கண்காணிப்பு கூண்டுகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News