அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு

தென்காசி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Update: 2023-01-24 05:53 GMT

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மருத்துவ துறை  இணை இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தென்காசி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த குழந்தைக்கு மருத்துவர்களின் அலட்சியத்தால் எலும்பு முறிவு ஏற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் -மந்த்ரா தம்பதியினர். இந்த தம்பதியினருக்கு திருமணம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய சூழலில், தற்போது, மந்த்ரா கருத்தரித்து பிரசவத்திற்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 12-ஆம் தேதி மந்த்ராவிற்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை அவரது கணவர் ஹரிஹரன் தென்காசி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்துள்ளார். நீண்ட நேரமாக சுகப்பிரசவத்திற்கு மருத்துவர்கள் காத்திருந்த நிலையில், சுகப்பிரசவம் ஆகாததால் அறுவை சிகிச்சை மூலம் மந்திராவிற்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்த நிலையில், குழந்தை பிறந்தது முதல் தற்போது வரை குழந்தை அழுது கொண்டு இருந்துள்ளது. இதுகுறித்து, ஹரிஹரன் - மந்திரா தம்பதியினர் பலமுறை மருத்துவர்களிடம் கூறியும் அவர்கள், எந்த விதமான சிகிச்சையும் அளிக்காமல், குழந்தைக்கு எறும்பு கடித்திருக்கும், பசிக்கும் என கூறி குழந்தை அழுவதற்கான காரணம் குறித்து எந்த விதமான பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில், 10 நாட்கள் மேலாகியும் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டு இருந்த சூழலில், ஹரிஹரன் மறுபடியும் போய் மருத்துவர்களிடம் கூறவே மருத்துவர்கள் குழந்தையை பரிசோதனை செய்துள்ளனர். அப்பொழுது, குழந்தையின் இடது காலில் பிரசவத்தின் போது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஹரிஹரன்-மந்திரா குடும்பத்தினர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே, உடனே குழந்தைக்கு தற்போது மாவு கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் கவனக்குறைவால் குழந்தையின் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகியும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்ததால், தற்போது அந்த குழந்தையின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ளதாக ஹரிஹரன் மந்தரா தம்பதியினரின் குடும்பத்தினர் மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சூழலில் தென்காசி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரேமலதா, பிரச்சினையில் ஈடுபட்டு வருபவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.

மேலும், அரசு மருத்துவர்கள் அலட்சியத்தால் ஒரு பெண் குழந்தையின் எதிர்காலம் கேள்விக் குறியான பரிதாபம் நோயாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் அத்தியாவசிய மருந்து உட்பட அனைத்து பொருட்களையும் வெளியே உள்ள மெடிக்கல் ஷாப்பில் வாங்க கூறி வருவதாகவும், இது குறித்து நோயாளிகள் இணை இயக்குநரிடம் தற்போது புகார் அளித்துள்ள சூழலில் அரசு மருத்துவமனையில் அனைத்து மருந்துகளும் உள்ள சூழலில், நோயாளிகளை ஏன் மருந்துகளை வெளியே வாங்க சொல்லுகிறீர்கள் என இணை இயக்குனர் தற்போது மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை அழைத்து கண்டித்தார். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News