கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட வேண்டிய சூழல் ஏற்படும்

Town Panchayat Employees Union Information

Update: 2022-06-25 15:15 GMT

மாநாட்டில் பேசிய பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கனகராஜ்

தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தவறினால் போராட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்றார் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கனகராஜ்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரத்தில் தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் 4-வது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார்.  இந்த மாநாட்டில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் தரமான குடியிருப்பு வசதி செய்ய வேண்டும், ஏற்கெனவே உள்ள குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகள் செய்திட வேண்டும், பிற துறைகளில் உள்ளது போன்று செயல் அலுவலர் முதல் இளநிலை உதவியாளர் வரித்தண்டலர் வரை மாறுதல் கோரும் அலுவலர்களுக்கு ஆண்டுதோறும் கலந்தாய்வு முறையில் பணியிட மாறுதல் வழங்க வேண்டும்.

கொரோனா நோய்தடுப்பு காலத்தில் முன்கள பணியாளராக பணியாற்றிய பணியாளர்களுக்கு அரசு வழங்கும் என அறிவித்த ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாக வசதிக்காக பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அலுவலகம் தேவையான பணியிடங்களுடன் தோற்றுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 34 அம்ச கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்  மேலும் அவர் கூறியதாவது: 34 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாநாடு நடைபெறுகிறது. துறை பாதுகாப்பு என்பது பிரதான விஷயமாக உள்ளது. 677 பேரூராட்சிகள் இருந்த நிலையில் தற்போது குறைக்கப்பட்டு 490 ஆக உள்ளது. இதனால் அனைத்து துறை ஊழியர்களின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரத்திற்கும் மேலான பணி இடங்களை இழந்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பேரூராட்சிக்கு இணையாக வருமானம் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

இத்துறையில் தற்காலிகமாக பணியாற்றும் ஓட்டுநர், கணினி இயக்குபவர்கள் ஆகிய பதவிகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றுபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் பதினைந்தாயிரம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 34 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தவறினால் மாநில செயற்குழு கூடி போராட்ட முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

மேலும் தற்போதைய அரசு தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளான பேரூராட்சி உள்பட அனைத்து துறை ஊழியர்களுக்கும் பழைய ஓய்வுதியம் வழங்கப்படும் என்ற வாக்குறுதி ஒரு வருடங்களாகியும் அரசு வழங்க முயலவில்லை அதேபோல் தொகுப்பூதியம், மதிப்பூதியம் அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags:    

Similar News