பாவூர்சத்திரத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

பாவூர்சத்திரத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

Update: 2021-11-18 03:30 GMT

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்களில் ஒன்றான கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தும் நிகழ்ச்சி தமிழகம் எங்கும் நடைபெற்று வருகிறது. இதன்படி தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வட்டாரம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மற்றும கீழப்பாவூர் யூனியன் சேர்மன் காவேரி ஆகியோர் கலந்து கொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில், நூற்றுக்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு வைபவம் நடத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி, கர்ப்பகாலத்தில் பெண்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள், காய்கறிகள், சிறு தானியங்கள், மருந்துகள் குறித்தும், தவிர்க்க வேண்டியவைகள் குறித்தும் விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து காய்கறி மற்றும் சத்துணவு குறித்த கண்காட்சி நடைபெற்றது.

அடுத்ததாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், கலந்து கொண்ட கர்ப்பிணிகள் அனைவருக்கும் மாலை அணிவித்து, சந்தனமிட்டு, கண்ணாடி வளையல் அணிவிக்கப்பட்டது. பின்னர் தாம்பூலம், பழங்கள், மஞ்சள் கயிறு, குழந்தைகள் நலன் குறித்த புத்தகம் அடங்கிய தொகுப்பு அனைவருக்கும் சீதனமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News