உலக ரத்ததான தினம் இன்று - மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கிராமம் முதல் நகரம் வரை இரத்தம் வழங்க தயாராக இருந்தும் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நாம் திணறி வருகிறோம்.
உலக ரத்த தான தினம். மருத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று நாம் அறிவியல் வளர்ச்சியில் பல்வேறு நிலைகளில் முன்னேறி வருகிறோம். நம்ம அறிவியலால் கண்டுபிடிக்க முடியாத விஷயங்கள் எதுவும் இல்லை என்று எண்ணிப் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் இயற்கை முற்றிலும் மாறுபட்டது. மனித அறிவுக்கு எட்டாத விஷயங்கள் உலகத்தில் நிறைந்திருக்கின்றன. மனிதனால் கண்டுபிடிக்க முடியாத அறிவியலால் உருவாக்க முடியாத ஒரு திரவம் இருக்கிறது என்றால் அது நம் உடலில் சுரக்கும் ரத்தம் தான்.
இன்று சர்வதேச இரத்த தான தினம். ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த மருத்துவரும் உயிரியல் வல்லுனருமான காரல் லேண்ட் ஸ்டீனர் என்பவரின் பிறந்த நாளை சர்வதேச இரத்த தான தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இவர்தான் ரத்தத்தில் உள்ள A, B, 0 ரத்த வகைகளைக் கண்டறிந்தார். நமது உடலில் 4 முதல் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. நமது உடலில் உள்ள ரத்த சிவப்பு அணுக்கள் 120 நாள் மட்டுமே உயிர் வாழும். அதன்பின் புதிய ரத்த சிவப்பணுக்கள் உருவாகும். கல்லீரல், மண்ணீரல், எலும்பு மஞ்சை, எலும்பின் முனைகள் ஆகிய பகுதிகளில் இரத்தம் உற்பத்தியாகிறது.
நமது உடல் ஏழு வகையான தாதுக்களை உள்ளடக்கியது. நாம் உண்ணும் உணவு முதல் நாளில் அன்ன ரசம் ஆகிறது. 2 -நாளில் இரத்தமாகவும் உருமாறுகிறது. அடுத்த நாள் சதை ஆகவும் ஏழாவது நாள் சுரோணிதமாக மாறுவதாக சித்த மருத்துவம் கூறுகிறது. கீரைகள், பழவகைகள் என சத்தான உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலமும், அன்றாட உணவு மூலமும் நமது உடலில் ரத்தம் எளிதாக உற்பத்தியாகிறது. உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம், . இது போன்ற விழிப்புணர்வு மூலம் பெரும்பாலான மக்கள் தற்போது ரத்ததான கொடையாளியாக மாறி வருகின்றனர்.
ஆனால் சரியான முறையில் ரத்தம் கிடைக்காமல் மாதமொன்றுக்கு 14,000 பேர் இறப்பை சந்திக்கின்றனர். கிராமம் முதல் நகரம் வரை இரத்தம் வழங்க தயாராக இருந்தும் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நாம் திணறி வருகிறோம். பெரிய பெரிய நகரங்களில் ரத்த சேகரிப்பு மற்றும் சேமிப்பு வங்கிகள் உள்ளது. ஆனால் சிறிய நகரங்கள் கிராம மருத்துவமனைகளில் இதுபோன்ற வசதிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. ஒருத்தர் ரத்தத்தை தானமாக தர முன்வந்தும் அதைப் பெற்று சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
நமது மருத்துவத்துறை. ஒருவர் வருடத்திற்கு நான்கு முறை இரத்த தானம் செய்யலாம். அவர் ஒருமுறை கொடுக்கும் ரத்தத்தின் மூலம் சிவப்பணுக்கள், பிளாஸ்மா போன்றவற்றால் இரண்டு அல்லது மூன்று உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. ரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம் என்ற வாசகங்கள் இல்லாத வாகனங்களை இல்லை என்ற அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய அரசு தேவையான மருத்துவ உள்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். ஒவ்வொரு வட்டத்திலும் உள்ள மருத்துவமனைகளில் ரத்த சேகரிப்பு மற்றும் சேமிப்பு நிலையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மருத்துவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.