கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்

சுரண்டையில் குடிபோதையில் ஊர் பொதுக் கிணற்றில் தவறி விழுந்தவர் சடலமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-01-15 18:14 GMT

 சுரண்டை சிவகுருநாதபுரம் விவேகானந்தர் குறுக்கு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சமுத்திரம் (57). சமையல் வேலை செய்து வந்தார். கடந்த 11ஆம் தேதி மாலை வேளையில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீட்டிற்கு திரும்பவில்லை. சமையல் வேலைக்கு சென்றிருக்கலாம் என குடும்ப உறுப்பினர்கள் எண்ணியிருந்தனர். தொடர்ந்து 2 நாட்களாக அவரிடமிருந்து தகவல் எதுவும் வராமல் இருக்கவே, அவரை தேடி வந்த நிலையில் இன்று ஊர் பொதுக் கிணற்றிற்கு சென்றவர்கள், சமுத்திரம் சடலமாக கிடப்பதை கண்டு குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த சுரண்டை போலீசார், மற்றும் வருவாய்த் துறையினர், சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினரின் உதவியுடன் அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான சமுத்திரம் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News