மனைவியுடன் கள்ளக்காதல்; தொழிலாளி வெட்டிக் கொலை - தந்தை, மகன் கைது

ஏற்காட்டில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-11 09:59 GMT

ஏற்காடு பகுதியில் பெண்ணுடன் கள்ளக்காதல்; தொழிலாளி வெட்டிக்கொலை. (மாதிரி படம்)

சேலம் மாவட்டம் ஏற்காடு, மாரமங்கலம் கும்மிப்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 40). விவசாய கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி புஷ்பா.  சிவக்குமாருக்கும், மாணிக்கம் மனைவி புஷ்பாவுக்கும் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில், இது சிலருக்கு தெரிய வந்தது.

இதை அறிந்த புஷ்பாவின் கணவர் மாணிக்கம், தனது மனைவியையும், சிவக்குமாரையும் கண்டித்துள்ளார். மேலும், சிவக்குமாரிடம் தனது மனைவி புஷ்பாவுடன் உள்ள தொடர்பை முறித்துக்கொள்ளுமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளார். ஆனால் அதனை அவர்கள் கேட்காமல் தொடர்ந்து சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் சிவக்குமாரிடம், மாணிக்கம் மற்றும் அவரது மகன் தங்கராஜ் ஆகியோர் கள்ளக்காதலை கைவிடுமாறு கேட்டுள்ளனர். ஆனால், அதை அலட்சியப்படுத்தும் விதமாக, சிவக்குமார் அவர்களிடம் பேசியுள்ளார். புஷ்பாவை, கண்டித்து அடக்கி வைக்குமாறும், தன்னிடம் இதுபற்றி மாணிக்கம் எதுவுமே பேசக்கூடாது என்றும் திமிராக பேசியுள்ளார். மேலும், இருவரும் கள்ளத்தொடர்பை இனிமேல் கைவிட முடியாது எனவும், புஷ்பாவை தன்னுடன் அனுப்பி விடுமாறும் சிவக்குமார் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

தகராறு முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த மாணிக்கமும், அவரது மகன் தங்கராஜூம், தங்களிடம் இருந்த கொடுவாளால் சிவக்குமாரை வெட்டியதுடன், இரும்பு கம்பியால் பலமாக தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த சிவக்குமார், ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதைப்பார்த்ததும் அவர்கள் இருவரும், பீதியடைந்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். பலத்த காயமடைந்த சிவக்குமாரின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கு வந்து பார்த்த சிலர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

படுகாயம் அடைந்த நிலையில், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிவக்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு, அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் சிவக்குமார் உயிரிழந்தார்.

இதுகுறித்து ஏற்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் ராஜ்மோகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சிவக்குமாரை கொடுவாளால் வெட்டிவிட்டு தலைமறைவாக இருந்த மாணிக்கம், அவரது மகன் தங்கராஜ் ஆகியோரை தேடிப்பிடித்த போலீசார், நேற்று இரவு கைது செய்தனர். அவர்களிடம் நடந்த கொலை சம்பவம் குறித்து, தீவிர விசாரணை நடத்தினர். 

கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம், ஏற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News