பெண்கள் சமூகவலைதளங்களில் படத்தை பதிவிடக் கூடாது: இன்ஸ்பெக்டர் அட்வைஸ்

பெண்கள் தங்கள் போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடக் கூடாது என சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார்.

Update: 2022-04-04 09:00 GMT

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற, விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சைபர் கிரைம் பிரிவுபோலீஸ் இன்ஸ்பெக்டர் வேதபிரவி பேசினார்.

பெண்கள் தங்களின் போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடக்கூடாது என்று சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கினார்.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சைபர்கிரைம் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் பாரதி தலைமையில் நடைபெற்றது. ஜேஆர்சி சங்க திட்ட அலுவலர் புவனேஸ்வரி வரவேற்றார். சைபர் கிரைம் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதபிரவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது:

மாணவ மாணவிகள் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சோசியல் மீடியாக்களை தவிர்ப்பது நல்லது. நன்றாக படித்து நல்ல பதவிக்கு வருவதுதான் ஸ்டேட்டஸ். இதைவிட்டு செல்போனில் ஸ்டேட்டஸ் வைப்பது தேவையில்லாதது. குறிப்பாக பெண்கள் தங்களின் போட்டோக்களை சோசியல் மீடியாவில் பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். செல்போனில் தெரியாதவர்கள் தரும் மெசேஜ்ஜிற்கு பதில் அளிக்க கூடாது. அறிமுகம் இல்லாத எந்த லிங்க் வந்தாலும் அதனை திறக்க கூடாது.

இண்டர்நெட் மூலம் வேலை தருகிறோம் என்பதை நம்ப வேண்டாம். அவை பணம் பறிக்கும் ஏமாற்று வேலை. அதே போல ஆன்லைனில் கடன் தருவது என கூறுவது முழுக்க முழுக்க ஏமாற்று வேலை. செல்போனில் சோசியல் மீடியாவை திறக்கும் போதும், போட்டோ வைக்கும் போதும், பிறந்த தேதி உள்ளிட்ட முழு விபரம் அளிக்கவேண்டாம். அப்போது தான் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது. எந்த ஒரு அப்ளிகேசனை கொடுக்கும் போதும் நமது முழு விபரத்தையும் எடுத்துவிடுவார்கள். தெரியாத நபர்களின் வீடியோ அழைப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பெண்கள் பாதுகாப்பை பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டும். குறிக்கோளோடு செயல்பட வேண்டும். படிப்பதில் மட்டும் முழுக்கவனம் செலுத்த வேண்டும். வங்கி கணக்கில் பணம் பறிக்கப் பட்டிருந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் மூலம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சைபர் கிரைம் குறித்த தகவல்களை சைபர்கிரைம்.ஜிஓவி.இன் என்ற வெப்சைட்டில் தெரிவிக்க வேண்டும். இன்று பெண்கள் பல்வேறு துறையில் பணியாற்றி வருகின்றன. அப்படி பணிக்கு செல்லும் போது, பெண்களை பெண்கள் தான் காத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், வங்கியில் பணம் பறிப்பு, ஏடிஎம் கார்டில் நம்பர் கேட்டு பணம் பறிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிடப்பட்டன. சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர்கள் புவனேஸ்வரி, சிவக்குமார் மற்றும் திரளான கல்லூரி மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News