மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளம் இறக்குமதிக்கு அனுமதி: பண்ணையாளர்கள் கோரிக்கை

மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என கோழிப்பண்ணையாளர்கள் மனு அளித்தனர்.

Update: 2022-09-12 00:15 GMT

பைல் படம்.

தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் தலைமையில், திரளான பண்ணையாளர்கள், மத்திய இணை அமைச்சர் முருகனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில், கடந்த 2 ஆண்டுகளாக, கோழித்தீவன மூலப்பொருட்கள் அபரிதமாக விலை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், முட்டை விலை அடிக்கடி சரிந்து வருகிறது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் பெரும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. நஷ்டம் ஏற்பட்டதால், சுமார் 25 சதவீதம் பண்ணையாளர்கள் தங்களின் பண்ணைகளை மூடிவிட்டனர். இதே சூழ்நிலை தொடர்ந்தால், மீதம் உள்ள பண்ணைகளையும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முக்கியமான தீவன மூலப் பொருளான மக்காச்சோளத்தின் விலை கடுமையாக உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ. 28 ஆக உள்ளது. மேலும், போதிய மக்காச் சோளமும் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தற்போது பெய்த கனமழையால், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிர், பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் இந்தியாவின் பல இடங்களில் மக்காச்சோளத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, கோழித்தீவனம் தயாரிப்பு முடங்கியுள்ளது.

இந்த நிலையில், கோழித்தீவன உற்பத்திக்கு தேவையான, உடைந்த மக்காச்சோளம் மற்றும் மரபணு மாற்றப்பட்ட மக்காச்சோளத்தை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு சார்ந்த எம்எம்டிசி, டிஜிஎச்டி போன்ற நிறுவனங்கள் மூலம் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்து, பண்ணையாளர்களுக்கு வழங்கி, இத்தொழிலை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News