போதமலைக்கு மலைப்பாதை அமைக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி

நாமக்கல் மாவட்டம் போதமலைக்கு, சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மலைப்பாதை அமைக்க பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி அளித்துள்ளது.

Update: 2022-06-08 08:30 GMT

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில், போதமலை உள்ளது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இங்கு மலைப்பாதை அமைக்கப்டவில்லை. போதமலையில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் தேவைக்காக கீழே உள்ள நகரங்களுக்கு வந்துசெல்ல சுமார் 10 கி.மீ தூரத்திற்கும் மேல் நடந்து வரவேண்டும். இதனால் நோயாளிகள் அவசர சிகிச்சை பெற முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். போமதலைக்கு தேர்தலின்போது வாக்குப்பதிவிற்கு தேவையான பொருட்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

போதமலைக்கு மலைப்பாதை அமைக்க பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை மலைப்பாதை அமைக்கப்படவில்லை. இந்த மலை, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் மரங்களை வெட்டிப் பாதை அமைக்க பசுமைத்தீர்பாயத்தின் அனுமதி பெற வேண்டி இருந்தது. தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், இதற்கு நடவடிக்கை எடுத்து வெட்டப்படும் மரங்களுக்கும் கூடுதலாக மரங்களை நடுவதற்கும், அதற்கான இழப்பீட்டை வழங்குவதற்கும், வக்கீல் மூலம் சுப்ரீம் கோர்ட்டில் வாதாடப்பட்டது. கடந்த 2 மாதம் முன்பு சுப்ரீம் கோர்ட்டின், பசுமை தீர்ப்பாயம், போதமலையில் ரோடு அமைக்க அனுமதி அளித்துள்ளது. இது சம்மந்தமான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நேற்று பசுமை தீர்ப்பாயம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது.

இதையொட்டி தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி ஆகியோர் பசுமைத்தீர்ப்பாயத்தின் உத்தரவை, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் நேரில் வழங்கினார்கள். கலெக்டர் பரிந்துரையின் பேரில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, உள்ளாட்சித்துறை மூலம் டெண்டர் விடப்பட்டு போமதலைக்கு, 34 கி.மீ தூரம் ரோடு அமைக்கும் பணி விரைவில் துவக்கப்படும் என்று அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.  

Tags:    

Similar News