விதை பரிசோதனை செய்து விதைப்பு செய்ய விவசாயிகளுக்கு வேண்டுகோள்
விதைகளை பரிசோதனை செய்து விதைப்பு செய்வதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறலாம் என வேளாண் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சரண்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தற்சமயம் ஆங்காங்கே நல்ல மழை பெய்துவருவதால், விவசாயப்பெருமக்கள் தங்கள் நிலங்களை தயார் செய்து உழவுப் பணியை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர். நிலத்தை நல்ல முறையில் பண்படுத்தி உழவுப்பணி மேற்கொண்டாலும், விதைக்கும்போது தரமான விதை உபயோகிப்பது மிக முக்கியமாகும். விதை தரமாக இல்லாவிடில் விவசாயிகளின் உழைப்பு, பணம் அனைத்தும் பயனற்று போய்விடும். எனவே பரிசோதனை செய்யப்பட்டு சான்றளிக்கப்பட்ட விதைகளை உபயோகிப்பது மிக முக்கியமாகும்.
விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் இருந்து பெறப்பட்ட தானிய வகை, பயறு வகை மற்றும் எண்ணெய்வித்து போன்ற விதைகளை, விதைக்காக சேமிக்கும்போது அதன் தரத்தினை அறிந்து சேமித்தல் இன்றியமையாததாகும். விதையின் தரம் என்பது முளைப்புத்திறன் புறத்தூய்மை, ஈரப்பதம்,பிற ரக கலப்பு ஆகியவைகளாகும். இதற்கான பரிசோதனைகள் நாமக்கல் விதைப் பரிசோதனை நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்ட விதைகளாயினும், விதைக்கும் முன் தரப்பரிசோதனை செய்து விதைப்பு செய்ய வேண்டும்.
நாமக்கல் மாவட்ட விதைப் பாணீசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு ரூ.80 கட்டணத்தில், விதையின் புறத்தூய்மை, முளைப்புத்திறன், ஈரப்பதம் பிற ரக கலப்பு ஆகிய பாணீசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தரமான விதைகளை உபயோகித்து அதிக மகசூல் பெற்று பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.