தேர்தல் பணி வாகனங்களுக்கு வாடகை பாக்கி - கலெக்டரிடம் டிரைவர்கள் மனு
சட்டசபை தேர்தல் பணிக்கு இயக்கிய தனியார் வாகனங்களுக்கு, வாடகை பாக்கியை வழங்க கலெக்டரிடம் டிரைவர்கள் மனு அளித்தனர்.
இது குறித்து, நாமக்கல் கலெக்டரிடம் வாகன ஓட்டுனர்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: நாமக்கல் பகுதியில் வாடகை கார் வைத்து இயக்கி வருகிறோம். நாமக்கல் சட்டசபை தேர்தல் பணிக்கு, போலீஸ் பணிக்காக ஏப். 4, 5, 6 ஆகிய 3 நாட்கள் வாடகை டாக்சிகளை இயக்கினோம். அதற்கான வாடகை, இதுவரை வழங்கப்படவில்லை.
கொரோனா பேரிடர் காலத்தில், மிகவும் சிரமத்தில் உள்ளோம். இச்சூழ்நிலையில், எங்களுக்கு, வாடகை பாக்கி தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், மண்டல தேர்தல் அதிகாரிகளுக்காக இயக்கிய வாகனங்களுக்கு மட்டும் வாடகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், போலீஸ் துறைக்கு இயக்கிய டி.போர்டு வாகனங்களுக்கு இன்னும் வாடகை வழங்கவில்லை. எங்களின் நிலையை கருத்தில் கொண்டு, வாடகை பாக்கியை விரைவாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.