காணும் பொங்கல் நாளில் களையிழந்த குமரி: சுற்றுலாவாசிகள் ஏமாற்றம்
காணும் பொங்கல் நாளில் தடை உத்தரவால் கன்னியாகுமரி களையிழந்த நிலையில் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், முக்கடல் சந்திக்கும் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியும் அடைக்கப்பட்டு உள்ளது.
தை பொங்கலின் மறுநாளான காணும் பொங்கல் அன்று, சபரிமலை மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் அய்யப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கன்னியாகுமரியில் கூடுவதோடு, சூரிய உதய காட்சியை கண்டு ரசிப்பார்கள்.
இதனிடையே தற்போது கன்னியாகுமரி சுற்றுலா தலம் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் குமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் கன்னியாகுமரி சுற்றுலா தலம் முழுவதும் பேரிகார்டு கொண்டு அடைந்துள்ள போலீசார், தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.