மதுரையில் சிறையிலிருந்து விடுதலையான ரவுடி வெட்டிக்கொலை
மதுரையில் விடுதலையாகி சில தினங்களே ஆன ரவுடி ஜெபமணி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது;
கொலை செய்யப்பட்ட ரவுடி ஜெபமணி
சேலம் மத்திய சிறையில் இருந்த ரவுடி ஜெபமணி, விடுதலையாகி சில தினங்களே ஆகி இருந்த நிலையில், மதுரையில் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் ஜெபமணி. இவர் மீது கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், பால் கடையில் கத்தியை காட்டி மிரட்டி பால் கேட்ட விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டார். இவர் மீதான குண்டர் சட்டம் நிராகரிக்கப்பட்ட நிலையில், கடந்த 5 நாட்களுக்கு முன்னர், அவர் சேலம் சிறையில் இருந்து விடுதலையானார்.
இந்நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி வெட்டிப் படுகொலை செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக, திடீர் நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக, அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து உள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து, காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.