நடப்பு கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு..! தமிழக அரசு அதிரடி..!
மாணவர்களுக்கு கற்பிக்கும் திறன் பாதிக்காமல் இருக்க தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணியை நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டுக்கான தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. இதையடுத்து நடப்பு கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த கல்வி ஆண்டு இடையிலேயே தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
இந்நிலையில் ஆசிரியர்கள் பணியை இந்த கல்வி ஆண்டு முடியும் வரை நீட்டித்து கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு பாதியில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வி ஆண்டு முடியும் வரை பணி நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில் மாணவர்களின் நலன் கருதி கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் கல்வித்தரம், உளவியல் ரீதியான பாதிப்பு, கற்றல் மற்றும் கற்பிக்கும் திறனில் குறைபாடு ஏற்படக்கூடாது என்னும் அக்கறையில் அரசு எடுத்துள்ள முடிவுக்கு சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.