அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் ரூ.11.29 லட்சம் உண்டியல் காணிக்கை

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.11.29 லட்சத்தை உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

Update: 2023-03-24 14:15 GMT

காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் ரூ.11.29 லட்சத்தை உண்டியல் காணிக்கையாக செலுத்தியிருந்தனா்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையம் அருகே மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவானது கடந்த மார்ச் 16ம் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வரும் மார்ச் 29-ம் தேதி கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 5-ம் தேதி குண்டம் திருவிழா நடக்க உள்ளது. இதற்காக, கோவில் வளாகம் முன், பந்தல் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், கோவில் வளாகம் முன்பு, குண்டத்திற்காக விறகுகளை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.


இந்நிலையில், கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக கோவில் வளாகத்தில் 6 உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கைகள் 5 மாதங்களுக்கு ஒரு முறை அறநிலையத்துறை சார்பில் திறக்கப்பட்டு எண்ணப்படும்.


அதன்படி, இன்று (மார்ச்.24) வெள்ளிக்கிழமை அறநிலையத்துறை சார்பில், உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சாமிநாதன் தலைமையில், அறநிலையத்துறை ஆய்வாளர் நித்யா, கோவில் செயல் அலுவலர் நந்தினீஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. இதில் அந்தியூர் ஆதர்ஷ் வித்யாலயா மகளிர் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு காணிக்கையை எண்ணினர். இதில், உண்டியல்களில் காணிக்கையாக பக்தர்கள் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 147 ரூபாயும், 135 கிராம் தங்கமும், 25 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News