ஈரோட்டில் போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த ஆசிரியை மீது வழக்கு

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-01-22 06:15 GMT

பைல் படம்.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி தென்காட்டுப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக ஜெயக்குமார் என்பவரது மனைவி ஏசுமரியாள் (53) பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 1996ம் ஆண்டு ஆசிரியை பணிக்கு சேர்ந்த நிலையில் பல்வேறு பள்ளிகளில் பணியாற்றி விட்டு கடந்த 15 ஆண்டுகளாக தென்காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், ஏசுமரியாள் கடந்த 1992ம் ஆண்டு ஆசிரியர் பட்டயத்தேர்வு முடித்த நிலையில், அதற்கான மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ஆசிரியர்கள் உண்மைத் தன்மை சான்று வழங்க உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து ஏசுமரியாள் அவருடைய சான்றிதழ்களை சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார்.‌ அங்கு அவருடைய ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களை பரிசோதனை செய்ததில் அவை போலியான சான்றுகள் எனத் தெரியவந்தது.

மேலும், ஏசுமரியாள் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் ஆகியோர் நடத்திய விசாரணையில் போலி சான்றிதழ் வழங்கி பணியில் சேர்ந்தது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அவர் மீது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த ஏசுமரியாள் மீது பவானி வட்டார கல்வி அலுவலர் கேசவன் அளித்த புகாரின் பேரில் கவுந்தப்பாடி போலீசார் 420 (மோசடி செய்தல்), 465 போலி ஆவணங்கள் தயாரித்தல்) 471 (போலி ஆவணங்களை உண்மையான ஆவணங்கள் போல் பயன்படுத்துதல்) ஆகிய உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News