ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரும் வாபஸ்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரும் வாபஸ் பெறுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-07 12:42 GMT

டி.டி.வி. தினகரன்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரும் வாபஸ் பெற உள்ளார் என டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ஆக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மறைவை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. வருகிற 27ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டார். மேலும் நாம் தமிழர் கட்சி, அ.ம.மு.க, தே.மு.தி.க. ஆகிய கட்சி வேட்பாளர்களும் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்து  செயல்பட்டு வருவதால் இ.பி.எஸ். அணி சார்பில் தென்னரசு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஓ.பி.எஸ். அணியின் செந்தில் முருகன் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார்.

உச்சநீதி மன்றத்தின் உத்தரவு மற்றும் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கொடுத்த நெருக்கடி காரணமாக நேற்று ஓ.பிஎ.எஸ்.அணியின் வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.  இந்நிலையில் அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாத்தும் போட்டியில் இருந்து விலக போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில்வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, களத்தில் பரப்புரை பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தச் சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆகவே, வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றப் பொதுத்தேர்தல்களில் நமது வெற்றிச்சின்னமான குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனையைக் கருத்தில்கொண்டு, நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக்  கழகம் போட்டியிடவில்லை என தெரிவித்துக்கொள்கிறேன்.  

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முதலில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளர் வாபஸ், இப்போது ஓ.பி.எஸ்.சுடன்  நெருக்கம் காட்டி வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பாளர் வாபஸ் பெற இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கும், காங்கிரசின் கை சின்னத்திற்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News