வள்ளலார் பிறந்த தினம்: முதல்வரின் அறிவிப்பிற்கு கடலூர் மக்கள் நன்றி

வள்ளலாரின் பிறந்த நாள் தனிப்பெரும் கருணை நாளாக அனுசரிக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பிற்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Update: 2021-10-05 07:00 GMT

அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் 05.10.1823-இல் பிறந்தார். கருணை ஒன்றையே வாழ்க்கைநெறியாகக் கொண்டு வாழ்ந்தார். அனைத்து நம்பிக்கைகளிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் சமரச சுத்த சன்மார்க்க சபையை நிறுவினார். இவர் வடலூரில் சத்தியஞான சபையை உருவாக்கினார்.

'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று பாடிய இவர். மக்களின் பசித்துயர் போக்க சத்தியதர்ம சாலையை நிறுவினார். அவர் ஏற்றிய அடுப்பு இன்றுவரை அணையாமல் தொடர்ந்து எரிந்த வண்ணம் பசியோடு இருக்கும் மக்களின் வயிற்றை நிரப்புகிறது,மனுமுறை கண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய உரைநடைகளை எழுதினார். இவர் பாடிய பாடல்களின் திரட்டு திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது 6 திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ளது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் நிறுவிய அவர். சத்திய தருமச்சாலையையும், சித்தி வளாகத்தையும் உருவாக்கினார். பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்து காட்டினார். அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி! என்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு ஒளி இன்றும் அறியாமையை நீக்கி அன்பை ஊட்டி வருகிறது.

அவர் பிறந்தநாளான அக்டோபர் ஐந்தாம் நாள் இனி ஆண்டுதோறும் "தனிப்பெருங்கருணை நாள்" எனக் கடைப்பிடிக்கப்படும்  என்ற தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு கடலூர் மாவட்ட மக்கள், சுத்த சன்மார்க்க அன்பர்கள்  நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News