தேங்கி நிற்கும் மழைநீரால் கடலூர் மாவட்டத்தில் வேகமாக பரவுகிறது 'டெங்கு'
கடலூர் மாவட்டத்தில் மழை நீர் தேங்கி நிற்பதால் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது நான்கு பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 1500க்கும் மேற்பட்டோர் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். அதில் நூற்றுக்கானக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெங்கு காய்ச்சலுக்கு தனி வார்டு ஏற்படுத்தாமல் ஆண்கள் சிகிச்சைப் பிரிவிலேயே இடம் ஒதுக்கி டெங்கு காய்ச்சல் நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் சூழல் உள்ளது. இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவருக்கு டெங்கு பரவுவது மட்டுமின்றி அரசு மருத்துவமனைக்கு வருபவருக்கும் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
இது ஒருபுறமிருக்க கடலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பெய்த மழை பல்வேறு குடியிருப்பு பகுதிகளில் குளம்போல தேங்கி இருப்பதால் அந்த நீரில் டெங்கு கொசுவினை உண்டாகும் லார்வாக்கள் வளரத் தொடங்கியுள்ளன. எனவே கடலூர் நகராட்சி நிர்வாகம் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என கடலூர் நகர மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.