தென் பெண்ணையாற்றில் சீரமைப்பு பணி: கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?

தென்பெண்ணையாற்றின் கரைகள் பலப்படுத்தும் நிலையில் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Update: 2021-11-25 03:20 GMT

கடலூரில் தென்பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், தென்பெண்ணையாற்று நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.பி., அணை, திருக்கோவிலுார் அணைக்கட்டுகள் நிரம்பி, கடந்த 19ம் தேதி  அதிகாலை 1.10 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

தென்பெண்ணையாற்றில் தண்ணீர் ஓடிய நிலையில், ஒரே நேரத்தில் 1.50 லட்சம் கன அடி தண்ணீர் கரைபுரண்டு வந்தது. 50  ஆண்டுகளுக்கு பின் கரைபுரண்டு வெள்ளம் கடலுார் மாவட்டம் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, மேல்பட்டாம்பாக்கம், மருதாடு, சாவடி, ஆல்பேட்டை வழியாக கடலுார் நோக்கி ஆர்ப்பரித்து வந்தது. ஏற்கனவே, ஆற்றின் கரைகள் பலப்படுத்தப்படாமல் இருந்ததாலும், ஆற்றின் நடுப்பகுதிகள் பல இடங்களில் புதர்கள் மண்டி, துார்வாரப்படாததாலும், தண்ணீர் செல்ல முடியாமல், கரைகள் உடைத்துக்கொண்டு, வயல்வெளிகள், நகர் பகுதிகள், கிராமங்களில் புகுந்தது.

இதனால் கடலுார் செம்மண்டலம், மருதாடு, அழுகியநத்தம், தாழங்குடா, குண்டு உப்பலவாடி, உச்சிமேடு, நாணமேடு, நெல்லிக்குப்பம், விஸ்வநாதபுரம், அண்ணாகிராமம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் கரைகள் சேதமாகியது. கடலுார் கஸ்டம்ஸ் சாலைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதனால், நுாற்றுக்கும் மேற்பட்ட நகர் பகுதிகளி்ல வீடுகள் தண்ணீரில் மிதந்தது. 50க்கும் மேற்பட்ட கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது. 20 ஆயிரம் ஏக்கரி்ல் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. 15 ஆயிரம் பேர் முகாம்களி்ல் தங்க வைக்கப்பட்டனர். அத்துடன் ஏராளமான கால்நடைகள் இறந்தன.

ஏற்கனவே, கடந்த 2015ல் கடலுார் கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், மண் அரிப்பு ஏற்பட்டு கரை உடைந்தது. இதனால் நகர பகுதிகளுக்கு தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. அதையடுத்து, ஆற்றின் இரு கரைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பருவ மழை துவங்கும் முன்பாக ஆற்றில் கருவேல மரங்கள் அகற்றி் துார்வாரும் பணியும் நடந்து வருகிறது. அதனால் தற்போது, 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஓடியும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், தென்பெண்ணையாற்றின் கரைகளை பலப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனாலேயே தற்போது பெரும் பாதிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மழை தொடரும் என, வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளதால், கடலுார் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தால் உடைப்பு ஏற்பட்ட  பகுதிகளில் சவுக்கு கட்டைகள் கட்டி மணல் மூட்டைகள் அடுக்கியும், பொக்லைன் இயந்திரம் மூலம் கரைகளை பலப்படுத்தியும் வருகின்றனர். ஒரே நேரத்தில், கடலுார் செம்மண்டலம், குண்டு உப்பலவாடி, மருதாடு, நெல்லிக்குப்பம் அருகே விஸ்வநாதபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கரைகள் சீரமைப்பு பணி, பொதுப்பணித்துறை சார்பில் நடந்து வருகிறது.

'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்' என்ற கதையாக, உடைப்பு  ஏற்பட்ட பிறகு, கடலுார் தென்பெண்ணையாற்று கரைகளில் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக கரைகளை பலப்படுத்தியிருந்தால், இத்தனை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்காது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News