கடலூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் இளம்கம்பூரைச் சேர்ந்தவர் பீட்டர்அபிஷேகநாதன் மகன் மகிமைதாஸ் (21). கடந்த 27-3-2019 அன்று அப்பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் சென்றவர் அங்கு மாடு ஓட்டிச் செல்வதற்காக வந்திருந்த 6 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்திட முயற்சித்துள்ளார். இதனை, அங்கிருந்த மற்றொருவர் பார்த்து சிறுமியை மீட்டுள்ளார். இதுகுறித்து, சிறுமி தரப்பில் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கடலூர் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி எஸ்.எழிலரசி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திட முயன்ற குற்றத்திற்காக மகிமைதாஸிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதம் சிறைத் தண்டனையும் விதித்தார்.