கடலூரில் குடியிருப்பு பகுதியில் பிடிபட்டது 8 அடி நீள முதலை
கடலூர் வெள்ளக்கரை பகுதியில் குடியிருப்புப் பகுதிக்குள் வந்த சுமார் 8 அடி நீள முதலை வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையினால் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடலூர் அருகே வெள்ளக்கரை பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதலை ஒன்று இருந்ததைக் கண்டு அப்பகுதியினர் அச்சமடைந்தனர். இதுபற்றிய தகவல் கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் குவியத்தொடங்கினர்.
பின்னர் இதுகுறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து தகவலறிந்த வனத்துறையினர், விலங்கு நல ஆர்வலர் செல்லா ஆகியோர் அங்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி 8அடி நீளம் கொண்ட முதலையை லாவகமாக பிடித்தனர்.
இதனையடுத்து வனத்துறை ரேஞ்சர் அமீத் மற்றும் விலங்கு நல ஆர்வலர் செல்லா பிடிபட்ட முதலையை சிதம்பரம் பகுதிக்குட்பட்ட நீரில் விட்டனர்.10 கி.மீ. சுற்றளவுக்கு ஆறுகள் இல்லாத நிலையில் 8 அடி நீள முதலை எப்படி வந்தது என அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்