கடலூரில் மழை வெள்ள சீரமைப்பு பணிகளை கலெக்டர் படகில் சென்று ஆய்வு

தென்பெண்ணை ஆற்றின் கரைகள் மற்றும் வடிகால் சீரமைப்பு குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் படகில் சென்று ஆய்வு நடத்தினார்.

Update: 2021-11-30 15:15 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெள்ள சீரமைப்பு பணிகளை படகில் சென்று ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் மீண்டும் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் ஆற்றின் இரு பக்க கரைகள் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளையும் விளைநிலங்களையும் சேதப்படுத்தியது. மேலும் நான்கு நாட்களாக பெய்த தொடர் மழையால் மழைநீர் தாழ்வான மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து பொதுமக்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரின் கடலோர பகுதிகளான உச்சிமேடு, நாணமேடு, கண்டக்காடு,தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்த கரைகளை சரி செய்வது மற்றும் பலப்படுத்துவது குறித்தும், நகரில் மழைநீர் தேங்காத வண்ணம் வடிகால் பணிகளை மேற்கொள்வது குறித்தும் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் உப்பனாறு மற்றும் கடற்கரைப் பகுதி வரை படகில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News