சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் ஓட்டல் தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Update: 2022-04-08 13:22 GMT

10ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கோபிநாதன் போலீஸ் பாதுகாப்பில் உள்ளார்.

கடலூர் முதுநகர் அருகே உள்ள தியாகவல்லி என்ற கிராமத்தை சேர்ந்தவர், ராதாகிருஷ்ணன் மகன் கோபிநாதன் (28). அங்குள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் தனது நண்பர்களை பார்ப்பதற்காக, நெல்லிக்குப்பம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அங்கு நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த ஒரு 15 வயது சிறுமியுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, கடந்த 27. 2. 2020 அன்று கோபிநாதன் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு தியாகவல்லியில் உள்ள தான் வேலை செய்யும் ஓட்டலுக்கு, அந்த சிறுமியை கடத்தி சென்று அங்கும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த, அந்த சிறுமியின் பெற்றோர், நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார், கோபிநாதன் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

மேலும் கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், அவர் மீது வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், சாட்சிகள் விசாரணை முடிவடைந்து, நேற்று இந்த வழக்கில் நீதிபதி எழிலரசி தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் கோபிநாதன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 4 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு, கடலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் இருந்து, ரூ.5 லட்சத்தை, 30 நாட்களுக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் கலாசெல்வி ஆஜராகி வாதாடினார்.

Tags:    

Similar News