கடலூரில் மது குடிக்க பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த பட்டதாரி மகன்

கடலூரில் மது குடிப்பதற்கு பணம் தர மறுத்த தந்தையை கொலை செய்த பட்டதாரி மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-10-19 10:36 GMT

கடலூரில் தந்தையை கொலை செய்ததாக  கைது செய்யப்பட்ட மகன் கார்த்தி.

கடலூர் ஆணைகுப்பம் மீனாட்சி நகர் பகுதியில் வசித்தவர் சுப்பிரமணியன். துணை கலெக்டராக பணிபுரிந்த இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்று விட்டார். இவருடைய மனைவி தபால் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து புற்றுநோயால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். சுப்பிரமணியனின்  இரட்டை மகன்களில் ஒருவரான கார்த்தி மட்டும் தந்தையுடன்  வீட்டில் இருந்து உள்ளார்.

32 வயதான பொறியியல் பட்டதாரியான இவர் எம்.பி.ஏ. வும் முடித்துள்ளார். மதுவுக்கு அடிமையான இவர் தினந்தோறும் மது குடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மேலும் எங்கும் வேலைக்கு செல்லாத இவர் தந்தையின் வருமானத்தை நம்பியே வாழ்ந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை இவரது வீட்டில் தந்தை அலறும்  சத்தத்தை அக்கம் பக்கத்தினர் கேட்டுள்ளனர்.

அதன்பிறகு எந்த ஒரு சத்தமும் இல்லாத நிலையில் பிற்பகல் 3 மணி அளவில் கார்த்தி அரசு மருத்துவமனை அருகில் சென்று அங்குள்ள ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் தனது தந்தை இறந்து விட்டதாகவும் உடலை வைப்பதற்கு ஃப்ரீசர் பாக்ஸ் வேண்டும் என கேட்டு கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஒரு ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஃப்ரீசர் பாக்ஸை ஆப்புலன்சில் வைத்து கார்த்தியை பின் தொடர்ந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு போய் ஃப்ரீசர் பாக்ஸ் வைக்கும் நேரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வந்து வீட்டில் சோதனை செய்தபோது கொடூரமான முறையில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு, கைகள் உடைக்கப்பட்டு, கண்ணாடியால் கிழிக்கப்பட்டும் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு கார்த்தி வசித்த அறைக்கு சென்று பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.


காரணம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி மது பாட்டில்களை அடுக்கி வைத்து அதன் நடுவில் படுக்கையைப் போட்டு கார்த்தி படுத்து இருந்திருக்கிறார். மேலும் நூற்றுக் கணக்கான காலி சிகரெட் பாக்கெட்டுகளும் அங்கேயே கிடந்து உள்ளன. பல மாதங்களாக அவர் கடையில் இருந்து வாங்கி வந்து சாப்பிட்ட உணவு பொட்டலங்களை கூட வீட்டை விட்டு வெளியில் போடாமல் அங்கேயே வைத்துள்ளதை கண்டுபிடித்தனர்.

அதன் பிறகு கார்த்தியிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதைத் தொடர்ந்து அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதை அறிந்த போலீசார் அவரை வீட்டில் இருந்து கைது செய்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த சுப்பிரமணியன் உடலும் கடலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தாய் இறந்தது முதல் வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையான கார்த்தி தினமும் தந்தையிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்த நிலையில், இன்றும் மதுவுக்கு பணம் கேட்டு அதை கொடுக்க மறுத்த தந்தையை கார்த்தி கொலை செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். மன நோயாளியான பொறியியல் பட்டதாரி மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News