படகுகளில் கறுப்புக் கொடி கட்டி மீனவர்கள் போராட்டம்
சிறுதொழில் செய்யும் மீனவர்கள் அழிக்கும் இழு வலையினை தடைசெய்ய கோரி கடலூரில் கருப்பு கொடி கட்டிகொண்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா, நல்லவாடு, சோனாங்குப்பம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 300-க்கும் அதிகமான மீனவர்கள் பைபர் படகுகளில் கருப்புக் கொடி கட்டிக் கொண்டு, உப்பனாற்றில் மீன்வளத்துறை அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கையில் கருப்புக் கொடிகளுடன் இழுவலை மற்றும் எஸ்.டி.பி., ஐ.பி. வகை படகுகளை தடை செய்யக்கோரி கோஷங்களை எழுப்பினர். எஸ்.டி.பி., ஐ.பி., வகை மீன்பிடி படகுகள் துறைமுகத்திலிருந்து 5 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் மீன் பிடிக்கக் கூடாது என்றும், சிறிய கண் (40 மில்லி மீட்டருக்கு கீழ்) அளவுள்ள வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது, 240 அதிக குதிரைத்திறனுக்கு திறன்கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன் பிடிக்க செல்லக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்
மீன்வளத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம பிரதிநிதிகளை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இழு வலை பயன்படுத்த தடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த மீனவர்கள், தங்களது படகுகளுக்கு பயன்படுத்தப்படும் உரிமத்தினை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தடுக்கும் முறை கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரித்தனர்.