கடலூரில் காணொலி வாயிலாக விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்
கடலூரில் காணொலி வாயிலாக, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், காணொலி காட்சி வாயிலாக விவசாயிகளுக்கான குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்திலுள்ள 14 வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் இருந்து அந்தந்த பகுதிகளை சார்ந்த விவசாயிகள், முகாமில் பங்கேற்றனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர், வேளாண்மை மற்றும் அனைத்து துறை முதன்மை அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் விவசாயிகளிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். விவசாயிகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு, மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டது.
விவசாயிகளுக்கு தேவையான விதை மற்றும் உரம் தடையின்றி இருப்பு வைத்திருக்க வேண்டும்,மேலும் நிவர் மற்றும் புரவி புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டு விடுபட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பயிர் காப்பீட்டு தொகை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருவ மழையை எதிர்கொள்ள அனைத்து பாசன வாய்க்கால்கள் மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்க பொதுப்பணித்துறைக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில் வேளண்மைத் இணை இயக்குநர் திரு. பாலசுப்ரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) திரு. ஜெயக்குமார், வேளாண் உதவி இயக்குநர்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.