கடலூர்: தி.மு.க. துண்டு அணிந்து வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
கடலூரில் தி.மு.க. தலைமை அறிவிப்பதற்கு முன்னதாக தி.மு.க. கட்சி துண்டுடன் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் பணி ஐந்தாவது நாளாக இன்று நடைபெற்றது.
இந்நிலையில், தி.மு.க.வில் கடலூர் நகர செயலாளராக உள்ள கே.எஸ்.ராஜா மற்றும் வி.எஸ்.எல்.குணசேகர், நட்ராஜ், சுந்தர் ஆகியவர்களுக்கு இடையே கடலூர் மாநகராட்சியின் முதல் மேயர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே தி.மு.க. தலைமை கடலூர் மாநகராட்சிக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்காத நிலையில் தி.மு.க. நகர செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரி தி.மு.க. துண்டுடன், நல்ல நேரம் பார்த்து அமாவாசையில் கடலூர் மாநகராட்சியின் 20 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். மேலும் வேட்பாளர் ஒருவர் மட்டுமே உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் வந்து வேட்பு மனு செய்ய வேண்டும் என்ற நிலையில் விதிகளை மீறி 3 நபர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.