கடலூர் அருகே மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு
கடலூர் அருகே மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டத்தில் காலையிலிருந்து கடலூர், ரெட்டிச்சாவடி,நெல்லிக்குப்பம், ஆலப்பாக்கம்,பெரியப்பட்டு,பண்ருட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கடலூரை அடுத்த சாமியார்பேட்டை கடற்கரையில் மீன்பிடித்து விட்டு கரைக்கு வந்த மீனவர்கள் சுமார் 10 பேர் தாங்கள் பிடித்த மீன்களை வலையிலிருந்து எடுத்து வந்துள்ளனர். அப்போது கடற்கரையோரம் மீன்களை பிரித்தபோது மின்னல் தாக்கி 9 பேர் படுகாயமடைந்து கடலூர் மற்றும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் சாமியார்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மட்டும் சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும் கடலூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.