கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ரசாயனம் கசிவு: 3 பேருக்கு மூச்சுத்திணறல்
கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட ரசாயனக்கசிவால், 3 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
கடலூர் சிப்காட் பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் உள்ள தொழிற்சாலை ஒன்றில், நேற்றிரவு திடீரென ரசாயனக் கசிவு ஏற்பட்டது. ரசாயனம் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ரசாயன புகை வெளியேறியது.
இதனை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் ரசாயன புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீயணைப்புத் துறையினர் வந்து சம்பவ இடத்தில் ரசாயன புகை வருவதை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனிடையே ரசாயன புகை வெளியேறியதால் கண் எரிச்சல் ஏற்பட்டதாக கூறி அருகிலுள்ள பிள்ளையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் வட்டாச்சியர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.