கோவையில் இருந்து விமானத்தில் ஷார்ஜாவுக்கு சென்ற கரும்பு

ஷார்ஜா மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட கோவையில் இருந்து விமானத்தில் கரும்பு அனுப்பப்பட்டது.

Update: 2023-01-16 09:04 GMT

பைல் படம்.

கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் 5 நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் விமான சேவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் ஷார்ஜா மற்றும் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட கோவையில் இருந்து விமானத்தில் கரும்பு அனுப்பப்பட்டது. இதுதவிர மஞ்சள், வெல்லமும் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவை-ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் ஒவ்வொரு முறையும் 2.5 டன் முதல் 3 டன் எடையிலான சரக்குகள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஷார்ஜா விமானத்தில் கரும்பு கொண்டு செல்ல புக்கிங் செய்யப்பட்டது.

கடந்த 8-ந் தேதி முதல், கரும்பு அனுப்பும் பணி தொடங்கியது. முதல் நாளில் 1 டன்னுக்கு அதிகமாக கரும்பு புக்கிங் செய்யப்பட்டது. மொத்த கரும்புகளையும் கொண்டு செல்ல அதிக இடவசதி தேவைப்படும். இதனால், மற்ற பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் என்பதால் 400 கிலோ குறைத்து 600 கிலோ கரும்பு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

ஐந்து நாட்களில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் அனுப்பப்பட்டுள்ளன. அதில் ஐந்து டன் கரும்பு மற்றும் இரண்டு டன் வெல்லம், மஞ்சள், வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் அடங்கும்.

இந்த பொருட்கள், மதுரை, தேனி, நிலக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கிருந்து விமானம் மூலம் ஷார்ஜாவுக்கு அனுப்பப்பட்டன என தெரிவித்தனர்.

Tags:    

Similar News