செந்துறை அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செந்துறை அடுத்த மருதூர் தெற்குப்பட்டி காலனி பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு, தண்ணீர் ஏற்றக்கூடிய ஆழ்துளை கிணறு பழுதடைந்தால், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில் கடந்த சில மாதங்களாக சிரமம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி மக்கள் செந்துறை - ஜெயங்கொண்டம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த செந்துறை போலீஸார் மற்றும் ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.