திருமானூர்: பெரியமறை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தேரோட்டம்
பெரியமறை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த பெரியமறை கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஸ்ரீஅலர்மேல்மங்கா சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் ஸப்ததின பிரும்மோத்ஸவ விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 21-ம் தேதி சுவாமிகளுக்கு, அன்னம்கூடை, திருப்பாவாடை படையல் உற்சவம் நடைபெற்றது. 22-ம் தேதி அனுக்ஞை, புண்யாஹவசம் உள்ளிட்ட பூஜைகளும் பெருமாள் வீதியுலாவும் நடைபெற்றது. தொடர்ந்து தினந்தோறும் மாலை சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நிகழ்ச்சியின் முக்கிய நாளான நேற்று, தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் ஸ்ரீநிவாச பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருள, பக்தர்கள் தேரைவடம் பிடித்து இழுத்தனர். சுவாமிகளுக்கு வீடுகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை காண்பித்து வழிபாடு செய்தனர். தேரோட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.