அரியலூரில் கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணைத்தொகை

அரியலூரில் கோவிட் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத்தொகை பெற விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Update: 2022-04-14 09:01 GMT

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில்  கூறப்பட்டு இருப்பதாவது:-

அரியலூர் மாவட்டத்தில் கோவிட் -19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத்தொகை வழங்குவதற்கு இணைய தளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு, மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதிசெய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டுவருகிறது. இதுவரை 570 மனுக்கள் பெறப்பட்டு 513 இனங்களுக்கு ரூ.50,000/- வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும், 50 மனுக்கள் இருமுறை பெறப்பட்ட மனு மற்றும் இதர என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள 7 மனுக்கள் விசாரனையில் உள்ளது.

இந்நிலையில், மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழக்குஎண். I.A.No. 40111/2022 in M.A.No. 1805/2021 in W.P N.o. 539/2021, நாள் 20.03.2022-ல் வழங்கிய தீர்ப்பில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கோவிட் -19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் வரும் 60 நாட்களுக்குள் (18.05.2022 தேதிக்குள்) மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20.03.2022 முதல் ஏற்படும் கோவிட்-19 இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வுகாண வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரிமனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மனுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.

எனவே கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் முன செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News