அரியலூர் மாவட்டத்தில் 22,100 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி
அரியலூர் மாவட்டத்தில் 22,100 சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
தமிழக முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்பட்டோர் முதல் தவணையாக 6,52,284 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 5,89,504 நபர்களுக்கும், முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி 6,295 நபர்களுக்கும் இதுவரை கோவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 12-14 வயதிற்குட்பட்ட 22,100 சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-14 வயது சிறார்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு பள்ளிகள், 15 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் பயிலும் 7,8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு சுகாதாரத்துறையின் சிறப்பு முகாம்கள் மூலம் (Corbe vax) தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாக இன்று 25 பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மேலும், இன்று முதல் பள்ளிகள் மற்றும் 39 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12-14 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி முகாம் நடைபெறும்.
மேலும், கோவின் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர். எனவே, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தடுப்பூசி பணியினை செயல்படுத்திட சுகாதார துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரியலூர் மாவட்டத்தில் 12-14 வயதிற்குட்பட்ட சிறார்கள் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டு அரியலூர் மாவட்டத்தை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அரியலூர் நகர்மன்றத் தலைவர் க.சாந்தி, பொது சுகாதாரத்துணை இயக்குநர் கீதாராணி, நகராட்சி ஆணையர் த.சித்ராசோனியா, நகர் மன்ற உறுப்பினர்கள் புகழேந்தி, பரமேஸ்வரன், மருத்துவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.