அரியலூர் அருகே உருட்டுக் கட்டையால் ஒருவர் அடித்து கொலை, இரண்டு பேரை தேடுது போலீஸ்
அரியலூர் அருகே குடும்ப தகராறில் உருட்டுக் கட்டையால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் 2 பேரை தேடி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் சிறுவளூர் கிராமத்தில் பெண்கள் தகராறு குடும்ப சண்டையாக மாறி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலிசார் வழக்குபதிவு செய்து சம்பவத்தில் தொடர்புடைய இரண்டுபேரை தேடிவருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் சிறுவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது மகள் பிரகதீஸ்வரியும், கோவிந்தராஜின் மனைவி சின்னபொண்ணும் உறவினர்கள். இவர்களுக்குள் இடத்தகராறு கடந்த ஐந்து வருடங்களாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் சின்னபொண்ணு கருவேப்பிலை பறிக்க சென்ற போது பிரகதீஸ்வரிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, இரு குடும்ப பெண்களும் ஜாடைமாடையாக பேசி சண்டை போட்டுள்ளனர்.
இது குடும்பத்தில் உள்ள ஆண்களுக்கு தெரியவர சாமிநாதன் அருவாளை எடுத்துக்கொண்டு கோவிந்தராஜிடம் நியாயம் கேட்க சென்றுள்ளார். இது சண்டையாக மாறியதையடுத்து, கோவிந்தராஜ் மற்றும் அவரது மகன் தர்மராஜ் ஆகியோர் உருட்டுக்கட்டையால் சாமிநாதனை தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த சாமிநாதன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணைக்கு சிகிச்சை அழைத்து சென்ற நிலையில் அங்கு உயிரிழந்தார்.
இதனையடுத்து அரியலூரில் சிகிச்சை பெற்றுவந்த கோவிந்தராஜ் மற்றும் தர்மராஜ் ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டனர். அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான இருவரையும் தேடிவருகின்றனர்.